என்னோடு

என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...

Monday, August 22, 2005

எங்கே அந்த மானுட தர்மம்?

லகில் மிக அதிகமான கொலைகளைச் செய்தவர் யார் தெரியுமா?
அதுவரை உலகில் நிலவி வந்த போர் தர்மங்களையெல்லாம் ஒரே ஒரு "குட்டிப் பையன்"(Little Boy) மூலம் சிதறடித்த வரலாற்று நாயகன்தான் அவர். நாகரிகங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சவக்காட்டில் சந்தோஷமாக உறங்கிய அதிசய மனிதனும் அவரே. நான் என்ற சொல்லில் மட்டுமல்ல, நாங்கள் என்ற சொல்லிலும் ஆணவத்தைப் பிரசவிக்க முடியும் என்று நிரூபித்த அவர் வேறு யாருமல்ல. வரையரையற்ற நீதி? வழங்கும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரூமன் தான்.

இங்கே, உங்கள் பார்வைக்கு இருவேறு காட்சிகள் வைக்கப்படுகிறது. மானுட தர்மத்திற்கும், மமதைப் பிணிக்குமிடையே உள்ள பாரதூரமான வேறுபாட்டை இக்காட்சிகள் படம்பிடித்துக் காட்டுகிறது.

- அபூ ஆதில் -

இனி காட்சிக்குள்ளே...


"ஜனாதிபதி அவர்களே...! நேற்று இரவு நன்றாகத் தூங்கினீர்களா?" - இது செய்தியாளர்களின் கேள்வி.
"ஆமாம்...! எப்போதையும் விட நேற்று அமைதியாகத் தூங்கினேன். எங்கள் பரிசோதனை வெற்றி பெற்று விட்டது. இந்த உலகத்தில் நாங்கள்தான் இப்போது பலம் வாய்ந்தவர்கள்." - இப்படி பதில் சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன்.
இதற்கு முதல் நாள்தான் ஜப்பான் நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. நாகசாகி, ஹிரோஷிமா எனும் இரு நகரங்களும் வரைபடத்திலேயே இல்லாமல் ஆகிவிட்டன. எப்படிச் செத்தோம் என்று அறியாமலேயே இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்கள்.
எல்லா வகையான போர் தர்மங்களையும், சர்வதேச சட்டங்களையும், மனித நாகரிகங்களையும் மீறி, உலகிற்கு தன் வல்லமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடத்தப்பட்ட கொடூரம் இது...!
அன்று வீசப்பட்ட அணுகுண்டுகளின் கதிர்வீச்சுக்களால் இன்றைக்கும் அந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நுரையீரல் கோளாறுகள், புற்றுநோய், பிறவியிலேயே ஊனம் போன்ற பல நோய்கள் வாட்டி வருகின்றன.
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்த பிறகுதான் ஜனாதிபதி நிம்மதியாக உறங்கினாராம்...!

@ @ @ @ @ @

அது ஒரு போர்க்களம். அந்தக் களத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாகச் செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் துடித்துப் போய் விட்டார்கள்.
அந்த இடத்துக்கு விரைந்தார். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். பிறகு முகம் சிவக்க, தம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் கேட்கிறார்கள். "இவள் போர் செய்யவில்லையே! பிறகு ஏன் இவள் கொலைக்கு ஆளானாள்? "இவ்வாறு கேட்டு, போர் சமயத்திலும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
மனிதத் தன்மைகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும் கொடூரப் போர்க்களத்திலும் இஸ்லாம் மானுட நாகரிகத்தைக் கடைப்பிடித்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்பே அது மிக உயர்வான போர் ஒழுங்கு முறைகளை
வகுத்துத் தந்து விட்டது.
நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் கூறினார்கள்:
* போரில் பங்கு கொள்ளாத வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோரைக் கொள்ளாதீர்கள்.
* மடங்களில் உள்ள துறவிகளையும், வணக்கத்தலங்களில் இருக்கும் மக்களையும் கொல்லாதீர்கள்.
* நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.
* விளை நிலங்களையும், மக்கள் வாழும் பகுதிகளையும் அழிக்காதீர்கள்.
இப்படிப் பல கட்டளைகள், நெறிமுறைகள்!
இவை எல்லாவற்றையும் விட திருக்குர் ஆனில் ஓர் அருமையான வசனம் உண்டு. மனித உயிர்களை இஸ்லாம் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
" நியாயமின்றி ஒருவன் மற்றவனைக் கொலை செய்து விட்டால் அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். எவன் ஒருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போலாவான்!"
(திருக்குர் ஆன் - 5:32)
அநியாயமாக மனித இரத்தம் சிந்தப்படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நிலையில் போர் மேகங்கள் சூழுமேயானால் அப்போதும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது.
ஜிஹாத்-புனிதப்போர் என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பவர்களும் சரி, பன்னாட்டுத் தலைவர்களும் சரி - இஸ்லாம் கூறும் இந்த மானுட தர்மத்தைப் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்...!
நன்றி: சிராஜுல் ஹஸன்.

Sunday, August 14, 2005

பொது? சிவில் சட்டம்

தேசத்தந்தை மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இம்ரானாவின் சம்பவத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கீறல் விழுந்த ரெக்கார்டை மறுபடி Play பண்ண ஆரம்பித்திருக்கிறது தேச விரோத சங்பரிவார் அமைப்பு. எத்தனையோ முறை பதில் கொடுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட, மக்களின் மறதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு மிகுந்து காணப்படும் இக்காலத்தில் அவ்வப்போது நாமும் அதுபற்றிய விளக்கத்தை சிந்திக்கும் பொது ஜனத்துக்கு சமர்ப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இவர்கள், அவ்வப்போது வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம்களை மையமாக வைத்து பொது சிவில் சட்டம் வேண்டும், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வீர!முழக்கம் இடுவதைக் கேட்கும்போது உண்மையிலேயே இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தனது அனைத்து விவகாரங்களுக்கும் தனக்கென தனி சட்டம் வைத்துக்கொண்டு தனியாக அரசாங்கம் நடத்துவதைப் போல் ஒரு மாயையை ஏற்படுத்தும். ஆனால், உண்மை நிலையோ வேறு.

இந்த நாட்டில் மதச்சார்பற்ற ஓர் அரசின் கீழ் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சில விவகாரங்களுக்கு மட்டும் இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்து வருகிறது. இதேபோல் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, புத்த சமயத்தினருக்கும் அவர்களுக்கென்று தனியார் சட்டங்கள் அமலில் இருந்து வருகிறது. ஆனால்,குற்றவியல் நடைமுறைக்கு மட்டும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான I.P.C. ( INDIAN PENAL CODE ) எனும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தனியார் சட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. மொகலாய மன்னர்கள் என்று இந்தியாவில் தன் கால்களை ஊன்றினார்களோ, அன்றிலிருந்தே அவரவர்கள் சார்ந்திருந்த மதங்களுக்குரிய சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வந்தார்கள்.

அதன்பின், கி.பி. 1862-ல்தான் I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற புதிய சட்ட முறையைக் கொண்டு வந்தார்கள். இதுவும் கூட இங்கிலாந்தின் சட்ட முறையினை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டது. பின்னர், 1937-ல் முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM PERSONAL LAW - Shariath Application Act - 1937 ) அமலுக்கு வந்தது. பின்னர், அதனைத் தொடர்ந்து 1939-ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ( MUSLIM MARRIAGES ACT - 1939 ) ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலை இன்று வரை நீடித்து வருகிறது என்றாலும்கூட, இன்றைய இந்தியாவில் இந்த முஸ்லிம் தனியார் சட்டம் மிகப்பெரும் துவேஷத்துக்கு ஆளாகி வருகிறது. பெரும்பான்மையினரின் மதத்தின் மீது வெறியூட்டி இஸ்லாத்திற்கெதிராக மாபெரும் சூழ்ச்சிகளையும் சதித்திட்டங்களையும் தீட்டிவரும் சங்பரிவார்களின் அரசியல் ரூபமான பி.ஜே.பி- யின் தலை?வர்கள், முஸ்லிம்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகிறார்கள்.

சங்பரிவார்கள் கூறுகிறார்கள்: "இந்திய முஸ்லிம்கள் குற்றவியல் நடைமுறைகளில் எவ்வாறு I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற பொதுவான சட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ, அவ்வாறே அனைத்து விஷயங்களிலும் ஷரீஅத்தைக் கைவிட்டு விட்டு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாமே" என்று. இவர்களின் இந்தப் புலம்பலுக்கு ஒரு இஸ்லாமிய அறிஞரின் கூற்றையே பதிலாக வைக்கிறேன். "ஓர் அறையில் காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் இரு ஜன்னல்களில் ஒன்று மூடியிருப்பதைக் கண்டு அதுபோல் மற்றொன்றையும் மூடிவிடலாம் என்று எண்ணுவது பேதமை அல்லவா?.

சிவில் சட்டங்களுக்கும், கிரிமினல் சட்டங்களுக்குமிடையில் மிகப்பெரும் வேறுபாடு உண்டு. கிரிமினல் விஷயங்கள் நேரடியாக நீதிமன்றங்களால் தீர்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால், சிவில் விஷயங்கள் அப்படியல்ல. சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்கள் மன்றத்திலும் தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறானென்றால் அவனுடைய பிரச்சினையை எவ்விதத்திலும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை அரசாங்கம் அனுமதிக்கவும் செய்யாது.

ஆனால், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சிவில் விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதை நீதிமன்றத்துக்கு வெளியிலும் தீர்த்துக்கொள்ள முடியும். இதை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது. மேலும், இது போன்ற சிவில் விவகாரங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள் விவகாரங்கள். முஸ்லிம்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்படும் எந்த விஷயமும் மற்றவர்களை, மாற்றுமதத்தினரை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

இந்நிலையில், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற விவகாரங்களில் பொது சிவில் சட்டம் கோருவோரின் நோக்கம் அப்பழுக்கற்ற இஸ்லாமிய விரோத மனப்பான்மையே என்பதில் ஊசிமுனையளவும் சந்தேகமில்லை. முதலில் ஒரு விஷயத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்று முடிவு செய்வதாகயிருந்தால், அதற்கான சரியான காரணம் ஒன்று இருக்க வேண்டும். இவர்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் எந்த ஒரு வலுவான காரணத்தையும் இதுவரை வைக்க முடியவில்லை. இவர்களால் சுட்டிக்காட்ட முடிந்ததெல்லாம் ஒரு ஷாபானு வழக்கு மட்டுமே. அதுவும்கூட அரசியல் காரணங்களால் சந்திக்கு வந்த ஒரு விஷயம் என்பதை ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் நன்றாக அறிவார்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்குள்ளே நடக்கும் எந்த விவகாரத்திலும் அந்த சமுதாயம் மற்றவர்களைத் துணைக்கு அழைப்பதில்லை. அதற்குத் தேவையும் இருக்கவில்லை. ஆனால், அழையா விருந்தாளிகளாக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குள் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு நுழையும் சங்பரிவார்கள் உடனே கையில் எடுக்கும் விஷயம் பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதுதான்.

இவர்களின் இந்த மனப்பான்மையைச் சற்று சிந்தித்துப்பார்த்தால், அடுத்த வீட்டுக்காரன் மீது ஆளுமை செலுத்தத் துடிக்கும் அதிகாரப் போக்குதான் இங்கு வெளிப்படுகிறது. எனது அடுத்த வீட்டுக்காரர் ஐயங்கார் என்று தெரிந்தும் அவரை, நான் சாப்பிடுவதைப் போல் மீனையும் இறைச்சியையும் சாப்பிடு என்றோ அல்லது நாமிருவரும் பொதுவாக இன்றிலிருந்து முட்டை சாப்பிடுவோம் என்றோ கூறுவது அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது. எப்படி ஒரு வீட்டில் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட சகோதர, சகோதரிகளோடு அவர்களது மனப்பான்மையை அறிந்து நடந்து கொண்டு குடும்ப ஒற்றுமையைக் காக்கிறோமோ, அதுபோல் பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டில் வாழும் நாம், ஒருவர் மற்றவரது கலாச்சாரத்தை மதித்து நடந்து கொள்ளும்போதுதான் இந்நாட்டில் சமூக ஒற்றுமையைக் காக்க முடியும். சமூக ஒற்றுமை ஒரு நாட்டில் மேலோங்கும்போதுதான் அந்நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்.

மேலும், பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு அரசியல் சாசனத்தில் அவற்றைத் தடுத்து சட்டமியற்றப்பட்டும் கூட மறைமுகமாக வக்காலத்து வாங்கும் சங்பரிவார்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் மட்டும் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக காட்டிக் கொள்ள முனைந்து நிற்கிறார்கள். அதிலும் அவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

பொது சிவில் சட்ட விஷயத்தில் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் சாசன வரிகளையே ஆதாரம் காட்டுகிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசன பிரிவு 44-ல் உள்ள வழிகாட்டிக் கொள்கையில் கூறப்படும் "நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் உருவாக்கிட முயல வேண்டும்" என்ற வரிகளையே சுட்டிக் காட்டுகின்றார்கள். இது ஒரு வழிகாட்டிக் கொள்கைதானே தவிர அரசியல் சாசன சட்டம் அல்ல.

இம்மாதிரியான வழிகாட்டிக் கொள்கைகளையெல்லாம் சட்டமாக்கிட ஆவல் கொண்டிருந்தால் முதலில் மதுவிலக்கு சம்மந்தமான அரசியல் சாசன வழிகாட்டிக் கொள்கையை சட்டமாக்கிட முனைந்திருக்க வேண்டும். மது என்பது அனைத்து சாராரும், அனைத்து மதத்தவரும் எதிர்க்கக்கூடிய, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அழித்தொழிக்க விரும்பும் ஒரு விஷயம். ஆனால் நடப்பதென்ன? இன்று பல மாநில அரசுகளே மதுக்கடைகளை திறந்து வைத்து மாபெரும் ஒழுக்க சீர்கேட்டிற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள்விவகாரமான ஷரீஅத்தை மாற்றி பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று கூப்பாடு போடுவது எவ்வளவு பெரிய விஷமத்தனம் என்பதை நாட்டு மக்கள் அனைவருமே நன்றாக உணர்ந்திட வேண்டும்.

மேலும், இந்த சங்பரிவார்களின் கூக்குரல் இந்திய அரசியல் சாசனத்திற்கே முற்றிலும் விரோதமானது என்பதைக்கூட வசதியாக மறந்து விட்டது இந்த கும்பல். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25-ல், "எல்லாக் குடிமக்களும் மனசாட்சி சுதந்திரத்திற்குச் சமமான உரிமை பெற்றவர்கள். தனக்கு விருப்பமான மதத்தில் நம்பிக்கை கொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு அமல் செய்யவும், அதனைப் பிரச்சாரம் செய்யவும் எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை உண்டு." எனக் கூறுகிறது. இதன்படி, எந்த ஒரு மதத்தினர் மீதும் யாரும் அவரவர்களுடைய மதச்சட்டங்களையோ, நடைமுறைகளையோ கைவிடும்படி எந்தவிதத்திலும் நிர்ப்பந்திக்க முடியாது. அப்படித் திணிக்கும் பட்சத்தில் அது இந்தியாவில் சிறுபான்மையினர்கள் தன் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதற்கான உரிமைப்புரட்சி வெடிக்கக் காரணமாகிவிடும். இந்த உண்மையை சங்பரிவார்களின் தலைமையே ஒருமுறை ஒப்புக்கொண்டதுதான் சிறப்பு.

MOTHER LAND என்ற பத்திரிக்கையில் 21/08/1972 அன்று வெளியான ஒரு செய்தியில், "ஆர்.எஸ்.எஸ் தலைவரான குரு கோல்வால்கர், 1972 ஆகஸ்ட் 20-ல் தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சிக்கழகத்தைத் துவக்கி வைத்துப் பேசியபோது,'பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்று சொல்வது தவறு; இயற்கைக்கு விரோதமானது; விபரீத விளைவுகள் உண்டாக்கக் கூடியது.' என்று அறிவுறுத்தி இருக்கிறார்" என்று தெரிவிக்கிறது. ஆனால், தன் தலைமையின் கருத்தையே புறக்கணித்து விட்டு இன்று பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஓலமிடுகிறது சங்பரிவார் கும்பல்.

இந்நாட்டின் சிறுபான்மையினர்கள் எவ்விதத்திலும் தங்கள் மத சுதந்திரத்தை இழந்து விடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டே, அரசியல் சாசனத்தை வகுத்தளித்த சிந்தனையாளர்கள் சாசனத்தின் 25-வது பிரிவை ஏற்படுத்தி வைத்தார்கள். பொது சிவில் சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்க முயன்றால் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்களின் கலாச்சாரத்தை ஒட்டிய சட்டமாகவே அமையும். அவ்வாறாகும் பட்சத்தில் அதை பொது சிவில் சட்டம் (COMMON CIVIL CODE) என்று சொல்வதைவிட ஹிந்து சிவில் சட்டம் (HINDU CIVIL CODE) என்று அழைப்பதே பொருத்தமாயிருக்கும்.

பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை பாமர மக்களைக் கவர வசதியான பெயராக அமைந்து விட்டது. ஆனாலும் அவர்களது எண்ணம் ஈடேறப்போவதில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

Monday, August 08, 2005

உள்ளத்தை உலுக்கிய கேள்வி...

(பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக...)

அது ஒரு கற்பனைக்கதை தான் என்றாலும் கருத்தாழம் மிக்கதொரு கதை. சிட்டுக்குருவி ஒன்று குளிர்காலத்தில் கதகதப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது. சின்னச்சின்ன குச்சிகளை அதற்கென இளவேனில் காலம் தொட்டே சேகரிக்கத் துவங்கியது. அந்தோ பரிதாபம்! குளிர் காலம் வருமுன்பே குச்சி சேகரிக்கும் முயற்சியில் தன் இன்னுயிரினை மாய்த்துக்கொண்டது. அதேபோன்று வளமோடு வாழ வேண்டும் என்ற ஆசையினால் உந்தப்பட்ட மனிதன் பொருளீட்டும் முயற்சியிலேயே வாழ்வைத் தொலைத்து விட்டு அல்லலுறும் காட்சிகள் இன்றைய நிதர்சனம்.

அலுத்துச் சலித்துப்போய் நேரம் கழித்து வீடு திரும்பிய அவர் தனக்காகத் தன் ஐந்து வயது மகன் கதவருகே காத்திருந்ததைக் கண்டு எரிச்சல் அடைந்தார்.

"அப்பா! நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா?"

"கண்டிப்பாகக் கேட்கலாம். என்ன அது?" தந்தை கேட்டார்.

"அப்பா, ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?"

"இது உனக்குத் தேவையற்ற கேள்வி. இதைக் கேட்பதற்கு என்ன காரணம்?" கோபத்தைக் கொப்பளித்தார் தந்தை.

"சும்மாதான். நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதைத் தயவு செய்து சொல்லுங்களேன்" கெஞ்சினான் மகன்.

"நீ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சொல்லுகிறேன். ஒரு மணிநேரத்தில் நான் 20 டாலர்கள் சம்பாதிப்பேன்."

தலையைக் குனிந்துகொண்டே "ஓ! அப்படியா" என்ற மகன் தலையைச் சற்றே நிமிர்த்தி "எனக்கு நீங்கள் 10 டாலர்கள் கடன் தர முடியுமா?" என்றான்.

"உனக்கு ஏதோ விளையாட்டுச் சாமான் வாங்கவோ அல்லது தேவையற்ற வீண் செலவு செய்யவோ காசு வெண்டும். அதை என்னிடமிருந்து வாங்குவதற்காகத்தான் நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று கேட்கின்றாயோ? நேரே உன்னுடைய அறைக்குச் சென்று படுத்துக் கொள். நீ ஏன் இவ்வளவு சுயநலக்காரனாக இருக்கிறாய் என்று யோசித்துப்பார். நேரம் காலம் இல்லாம நான் வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். இந்த மாதிரி சின்னத்தனமான விளையாட்டுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை."

அச்சிறுவன் அமைதியாக தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டான். தந்தை கீழே அமர்ந்தார். அவருடைய கோபம் தணியவில்லை. "ஏதோ பணம் வேண்டும் என்பதற்காக என்ன கேள்வி கேட்கிறான் இந்தப் பயல்?" அவருடைய உள்ளம் குமுறியது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் கடந்த பின், சற்றே அமைதி அடைந்தவராக சிந்திக்கத் துவங்கினார். "அவனிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ? அவன் அப்படி அடிக்கடி பணம் கேட்பவன் இல்லையே. உண்மையிலேயே அந்தப் பத்து டாலருக்கு அவனுக்குத் தேவையான ஏதாவது வாங்க வேண்டும் என விரும்பியிருப்பானோ" இவ்வாறு சிந்தித்தவராக அவனுடைய அறைக்கதவைத் திறந்தார்.

"தூங்கிட்டியாடா பையா?" என்றார்.

"இல்லேப்பா. முழிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்" என்றான் மகன்.

"இப்படியே யோசிச்சுப் பார்த்தேன். நான் உன்னிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டேனோ? இன்னைக்குக் கொஞ்சம் வேலை அதிகம். என் எரிச்சலையும் கோபத்தையும் உன்னிடம் காட்டி விட்டேன். இந்தா நீ கேட்ட 10 டாலர்."

மகிழ்ச்சியோடு படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த சிறுவன் "ந்ன்றி அப்பா" என்று கூறிக்கொண்டே தன் தலையணைக்குக் கீழிருந்து கசங்கிப் போயிருந்த டாலர் நோட்டுக்கள் சிலவற்றை வெளியில் எடுத்தான். அச்சிறுவன் மெதுவாகத் தன்னிடமிருந்த பணத்தை எண்ணிக்கொண்டே தன் தந்தையை நோக்கினான். தன்னிடம் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டே மீண்டும் தன்னிடம் மகன் பணம் கேட்டிருக்கின்றான் என்பதை அறிந்த தந்தைக்கு மீண்டும் கோபம் வந்தது.

"அதுதான் பணம் வச்சிருக்கியே. திரும்ப பணம் ஏன் கேட்கிறாய்?" கொந்தளித்தார் தந்தை.

"ஏன்னா போதுமான அளவு இல்லை. இப்ப இருக்கு." மகன் துணிவுடன் சொன்னான்.

"அப்பா! இப்போ என்னிடம் 20 டாலர்கள் இருக்கு... உங்களின் ஒரு மணி நேரத்தை நான் இப்ப வாங்கலாமா?"

நன்றி: தாஜ்மணாளன்

Monday, August 01, 2005

ஊடகங்களின் போக்கு

ம்ரானா விஷயத்தில் ஊடகங்கள் காட்டி வரும் அக்கறை சொல்லி மாளாது. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதைதான். வெரும் வாயைக் கூட மென்று கொண்டிருப்பவர்களுக்கு தேவ்பந்தின் தீர்ப்பு அவலாகக் கிடைக்கும்போது சொல்லவா வேண்டும்.

இது மாதிரி நேரங்களிலெல்லாம் ஊடகங்கள் தன்னை சிறுபான்மையினத் தோழனாக காட்டிக்கொள்ள முயலும். பாதிக்கப்பட்ட முஸ்லிமுக்காக களத்தில் குதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குட்டையைக் குழப்ப ஆரம்பித்துவிடும். அதைத்தான் இம்ரானா விஷயத்திலும் செய்து வருகிறது. விட்டில் பூச்சிகளைப்போல் சில முஸ்லிம்கள் அதில் மயங்கிப்போவதும் உண்டு.

தேவ்பந்த் போன்ற பாரம்பரியமிக்க மத்ரஸாக்கள் இன்னமும் கவைக்குதவாத மத்ஹபு சட்டங்களைக் கையில் வைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று அவ்வப்போது தப்பாட்டம் ஆடுவது கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த விஷயத்தில் தமிழகம் முன்னோடியாக இருப்பது கவனத்திற்குரியது. இந்த மாதிரி தவறான தீர்ப்புகள் கொடுக்கப்படும் நேரங்களில், முஸ்லிம்கள் இதை ஆதரிக்கிறார்கள் என்று ஓலமிடுபவர்களுக்கு சாட்டையடி கொடுப்பது போல் தமிழக முஸ்லிம் அமைப்புகள் ஒருமித்து குரல் கொடுத்திருக்கிறது.

இஸ்லாம் பெண்களின் திருமண விஷயத்தில் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட பெண்ணின் கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, இம்ரானாவின் விருப்பத்திற்கு மாற்றமாக தேவ்பந்த் கொடுத்த தீர்ப்பை செயல்படுத்தத் தேவையில்லை என்பதை அனைவரும் அறிய முடியும்.

இந்த நிலையில் இம்ரானாவின் விஷயத்தில் இஸ்லாமியச் சட்டங்கள் அநீதி இழைத்து விட்டதைப் போல் காட்டிக்கொண்டு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று மீண்டும் ஊடகங்கள் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் கோஷமிட ஆரம்பித்திருப்பது வேடிக்கைக்குரியது.

முஸ்லிம்களைப் பற்றிய விவகாரம் என்றாலே ஊடகங்கள் காமாலைக் கண் கொண்டு பார்ப்பதுதான் ஏன் என்று விளங்கவில்லை. இம்ரானா போன்றவர்களின் விஷயங்களில் அளவுக்கதிகமாக மூக்கை நீட்டி பக்கம் பக்கமாக எழுதி தன் மன அரிப்பை நீக்கிக்கொள்கிற பத்திரிக்கைகள் ரூப்கன்வர் போன்ற பெண்களின் விஷயத்தில் இதுவும் ஒரு செய்தி என்ற அளவிலே நின்று விடுவது வியப்பிற்குரியது.

மனுதர்மத்தை உயர்த்திப்பிடிக்கும் காவிச்சிந்தனை ஊடகங்கள் பொது சிவில் சட்டம் கேட்டு கூப்பாடு போடுவதும், அதற்குத் துணையாக ஷபனா ஆஸ்மி போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதுமான இவர்களின் பொய் முகத்தை நடுநிலையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்.

எனவே, சிந்தனைத் தாக்கத்தில் பெரும் பங்காற்றி வரும் செய்தி ஊடகங்கள் தனது நிலையை மாற்றி நடுநிலைக்குத் திரும்பினாலே சமூகத்தில் பெருமளவு பிரச்சினைகள் குறையும்.