என்னோடு

என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...

Friday, October 07, 2005

பெண்ணுரிமைப் பேணுவோம்

சென்ற வாரத்தில் ஒரு நாள் 'அரப் நியூஸ்' பத்திரிக்கையை படித்தபோது கண்ணில் பட்ட ஒரு செய்தி நவீன தலைமுறை இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் தறிகெட்ட தனத்தை பறைசாற்றியது. ரியாத் நகரில் சாலையில் நடந்து கொண்டிருந்த இரு பெண்களை சில இளைஞர்கள் பலாத்காரம் செய்து அதனை தனது கேமரா செல்பேசியில் பதிவு செய்ததாக வந்திருந்த செய்தி நாகரீக மனிதர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இளைஞர்களின் சிந்தனையை இதுபோன்று பாழாக்குவதில் மேற்கத்திய ஊடகங்களும், அதனை முன்மாதிரியாகக் கொண்டு தன்னை வார்த்துக் கொண்டிருக்கும் மற்ற ஊடகங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன. “செல்”லுக்குள் நடந்து கொண்டிருந்த குற்றங்கள் இன்று சாலைக்குள் வலம்வரும் விபரீதத்தை இங்கு காணமுடிகிறது.

மிகவும் கண்ணியமான முறையில் உடையுடுத்தி சென்று கொண்டிருந்த பெண்களையே இவ்வாறு சீண்டிப் பார்க்கும்போது அரைகுறை ஆடையுடன் அங்கங்கள் தெரிய பவனி வரும் இன்றைய மங்கைகளின் விஷயத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை.

முழுக்க முழுக்க ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களின் விளம்பரத்திற்குக் கூட பெண்களின் கவர்ச்சி அவசியம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் பகட்டு வெளிச்சத்தை நோக்கி விட்டில் பூச்சிகளாக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் நாகரீக! பெண்களை நினைத்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
பெண்கள் பெண்களாக வாழும்போதுதான் அவர்கள் முழு உரிமை பெற்றவர்களாக இருக்க முடியும். நான் எப்படியும் இருப்பேன் என்று அரைகுறை ஆடையுடன் வலம் வருபவர்கள், தனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய கண்ணியம் என்ற தனது உரிமையை இழந்தவர்களாகவே ஆகமுடியும்.

பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் மேலும் உறுதிப்படுத்தவே இஸ்லாம் பர்தாவை அவசியமாக்கியிருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். பெண்களுக்கு பர்தா ஒரு சிறந்த, எளிய பாதுகாப்பு வளையம் என்பதை உணர்ந்ததாலேயே மேலைநாட்டைச் சேர்ந்த Tanya C. Hsu என்ற மத்திய கிழக்கு ஆய்வாளர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“In Riyadh’s Bedu Souk I added a burqha and realized, for the first time in my adult life, men spoke directly to me rather than to a physique. That is respect.

ஆடையைக் குறைப்பதுதான் தான் பெறக்கூடிய மிகப்பெரும் உரிமை என்று நினைக்கும் விட்டில் பூச்சி பெண்வர்க்கமும், தன் உள்மனதில் உள்ள கீழ்த்தர ரசனை எனும் குரூரத்தை, பெண்ணுரிமைப் பாதுகாவலர்கள் என்ற போர்வையிட்டு மறைத்து வலம் வரும் ஆண்வர்க்கமும் இருக்கும் வரை கலாச்சாரச் சீரழிவை யாராலும் தடுக்க முடியாது.

சானியாவின் ஆடைக்கு வக்காலத்து வாங்கும் ஆடவர்கள் சொல்லும் வசனம் "ஆடையைப் பார்க்காதே; ஆட்டத்தைப் பார்" என்பது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க வருபவர்களில் கதைக்காக வருபவர்களும் உண்டு. கவர்ச்சிக்காக வருபவர்களும் உண்டு. இதுபோல்தான் எல்லா விஷயத்திலும். இதனைப் புரியாதவர்கள் போல் நடிப்பதும், சுட்டிக்காட்டுபவர்களை எழுத்துக்களால் தட்டிக் கேட்பதும் அவரவர் மன அழுக்குகளை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.

மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நாமும் மாறுதலுக்குட்பட வேண்டும் என்று கூறுபவர்களில் ஆண்கள் யாரும் மக்கள் கூடும் இடங்களில் அரைக்கால் சட்டைகளோடு வலம் வருவதில்லை. மேலும் மேலும் ஆடைகளால் முழுவதும் மறைத்த வண்ணமே தோன்றுகிறார்கள். அதுதான் சிறந்த கலாச்சாரம் என்பதை உணர்ந்ததாலேயே இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பொது இடங்களில் தோன்றும்போது நீளக்காற்சட்டை அணியுமாறு சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தப்பட்டார்கள். அப்போது யாரும் அதற்கு எதிராக கூக்குரலிடவில்லை. ஏனென்றால், ஆண்களின் ஆடைக் குறைப்பில் அவர்களுக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை.

பெண்கள் தங்கள் நிலையை உணர வேண்டும். ஆடையைக் குறைப்பதை விட்டு விட்டு தங்களை நோக்கி வரும் ஆப(அச)த்தைக் குறைப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமையை மீட்டுக்கொள்ள வேண்டும்.